Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஏனையவைவிளையாட்டு3000 மீற்றர் தூரத்தை ஓடிக்கடந்த விதுசனுக்கு ரவிகரன் எம்.பி வாழ்த்து

3000 மீற்றர் தூரத்தை ஓடிக்கடந்த விதுசனுக்கு ரவிகரன் எம்.பி வாழ்த்து

காலில் காயம் ஏற்பட்டிருந்தபோதும்,  இளையோருக்கான தெற்காசிய தடகளப்போட்டியில் காலணி அணியாமல் 3000மீற்றர் தூரத்தை முழுமையாக ஓடிக்கடந்த முல்லைத்தீவு – முத்தையன்கட்டு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மாணவன் ஜெயக்காந் விதுசனுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் விதுசன் எத்தடைவரினும் அடங்கமாட்டோம் என்ற அடங்காப்பற்று வன்னியின் பெருமையினை தெற்காசிய அரங்கில் ஓங்கி ஒலிக்கச் செய்திருப்பதாகவும் அவர்மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதனை நாயகன் ஜெயகாந் விதுசனுக்கான வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் கல்விகற்கும் ஜெயகாந்தன் விதுசன் தெற்காசிய இளையோருக்கான தடகளப் போட்டியில் 3000மீற்றரை ஓடிக்கடந்து ஒட்டுமொத்த இலங்கைக்கும்,  வன்னிக்கும்,  குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமைதேடித்தந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இதயபூர்வமான எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்
மகிழ்ச்சியடைகின்றேன்.

மாகாணமட்டப் போட்டியொன்றில் பங்குபற்றியிருந்தபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக,  அவரால் இந்த இளையோருக்கான தெற்காசிய தடகளப்போட்டியில் காலணியை அணியமுடியாத நிலையும் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.

இவ்வாறு காயமுற்றிருந்தபோதும் துவண்டுவிடாமல்,  விடாமுயற்சியோடு ஏற்பாட்டாளர்களுடைய அனுமதியைப்பெற்று காலணியின்றி இந்தப்போட்டியில் பங்குகொண்டு 09.59.56 என்னும் நேரத்தில் 3000மீற்றர் தூரத்தை முழுமையாக கடந்தது சாதித்துக்காட்டியுள்ளார்.

பலத்த சோதனைகளையும்,  வேதனைகளையும் கடந்து, தடைகளை உடைத்தெறிந்தே விதுசனால் இவ்வாறு சாதிக்கமுடிந்துள்ளது.

அதேவேளை 2024ஆம் ஆண்டுக்குரிய தேசிய கனிஸ்ர மெய்வல்லுனர் போட்டியில் 09.02.10 என்னும் குறைந்த நேரத்தில் 3000மீற்றர் தூரத்தை ஓடிக் கடந்து விதுசன் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். அதன் பிற்பாடு அவருக்கு ஏற்பட்ட காயம் இந்த தெற்காசிய தடகளப் போட்டியில் அவர் தனது முழுமையான திறமையை வெளிப்படுத்த முடியாமல்போனமை மிகுந்த வருத்தமளிக்கின்றது.

இந்த தெற்காசிய தடகளப் போட்டிகளின்போது காலில் ஏற்பட்ட காயம் விதுசனுக்கு ஒரு தடையாக இருந்துள்ளது. இருப்பினும் அவர் அடங்கிப்போய்விடவில்லை. ஏற்பாட்டாளர்களிடம் அனுமதிபெற்று காலணியின்றி ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு 3000மீற்றர் தூரத்தை முழுமையாகக் கடந்தது சாதித்துக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் விதுசன் தெற்காசிய அரங்கில்வைத்து அனைவருக்குமொரு செய்தியைச் சொல்லிவைத்திருக்கின்றார்.

அது என்னவெனில் ‘நாம் நெருப்பாற்றை நீந்திக்கடந்தவர்கள்,  அடங்காப்பற்று வன்னிமண்ணைச் சேர்ந்தவர்கள். எனவே நாம் எந் நிலைவரும்போதும் அடங்கிவிடமாட்டோம்’ என்ற வன்னிமண்ணின் பெருமையை தெற்காசிய அரங்கில் ஓங்கிஒலிக்கச்செய்திருக்கின்றார்.

அந்தவகையில் விதுசனின் சாதனைப் பயணங்கள் தொடரவேண்டும். அவர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் விதுசன் கல்விகற்கின்ற முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில்,  பயிற்சியில் ஈடுபடுவதற்கான முறையான மைதான வசதி இல்லை என்று சொல்லப்படுகின்றது.

கடந்த (17) ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில்,  எமது வன்னிப்பாடசாலைகளில் உள்ள வழப்பற்றாக்குறைகள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்த விடயங்கள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் கவனஞ்செலுத்தி வன்னிப் பாடசாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறைகளைப்
பூர்த்திசெய்வதற்கும் உரிய நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும் – என்றார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments