ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியா மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
யுக்ரேனில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்குமாறு சீனா, பிரேசில் மற்றும் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ள வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) பொதுச் செயலாளர் மார்க் ரூட், அப்படிச் செய்யவில்லை என்றால் அமெரிக்காவின் தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.
மறுபுறம், 50 நாட்களுக்குள் யுக்ரேன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்கு இப்படியொரு எச்சரிக்கை என்றால், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
“இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் விளாதிமிர் புதினை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபடச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், இந்த மூன்று நாடுகளும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று ரூட் ஜூலை 16ஆம் திகதி எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

