எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று
சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக
9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி இல்லத்துக்கு இன்று காலை
சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச்
சென்றனர்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினை கைது
செய்யத் தடை விதிக்க கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று பிற்பகலில்
விசாரணைக்கு வந்தது.
உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்இ ‘முதல்வர் குறித்தோ எந்த
திரைத்துறையினர் குறித்தோ அவதூறு கருத்துகளை பெண்களின்
கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசவில்லை. அரசியல் காரணங்களுக்காக
திருத்தி பிரசாரம் செய்யப்படுகிறது. நாளை சட்டப்பேரவை கூடும் நிலையில்,
திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘உதயநிதி ஸ்டாலினை
காவலில் வைக்கும் எண்ணம் இல்லை. தஞ்சை அழைத்துச் செல்லப்படும்
உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தப்பட்டு, காவல் நிலைய ஜாமீனில்
விடுவிக்கப்படுவார்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
காவல்துறையின் விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு
கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.

