தபால் திணைக்கள ஊழியர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் வவுனியா பிரதான தபால் நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டமையை
அவதானிக்க முடிந்தது.
காலை 9 மணி வரை முழுமையாக தபால் நிலையம் மூடப்பட்டிருந்த போதிலும் 9:00 மணியிலிருந்து அவர்கள் தண்டப்பணம் கட்டும் செயற்பாடு மற்றும் அத்தியாவசிய தபால் சேவைகள் உட்பட மட்டுப்படுத்தப்பட்டு சேவைகளை தபால் நிலையத்தின் ஊடாக வழங்கியிருந்ததுடன் பொதுமக்கள் பலரும் பயன்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று (13) வியாழக்கிழமை நள்ளிரவு வரை நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இப்பணிப் புறக்கணிப்பு காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையத்தின் ஊடாக விநியோகிக்க கூடிய தபால்கள் பொதியிடப்பட்ட நிலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளன.
தபால் நிலையங்களைப் பாதுகாக்கவும், தபால் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி முத்திரை வழங்கும் பிரிவு மற்றும் பதிவு தபால் பாரமேற்கும் பிரிவுகள் மாத்திரம் இயங்குகின்றன.
இதற்கென மூன்று அதிகாரிகள் மாத்திரம் கடமையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

