கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகளில், 65,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக மன்னார் வளைகுடா கடலில் பல இடங்களில் பல ஆண்டுகளாக விடப்படுகிறது. 1990க்கு முன் கீழக்கரை மன்னார் வளைகுடா கடலோரப்பகுதிகளில் முத்துக் குளித்தலும், அரிய வகை சங்கு சேகரித்தல் உள்ளிட்ட பல வகையான கடல் தொழில் நடந்தது.
கழிவுநீரின் தாக்கத்தால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீன்கள், ஆமைகள் போன்ற அரிய வகை உயிரினங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
மீனவர்கள் கூறுகையில், ‘கீழக்கரை கடற்கரையில் இருந்து 7 முதல் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் தீவுகள் வரிசையாக அமைந்துஉள்ளன. கழிவுநீர் கலப்பால் கடல் நீர் தொடர்ந்து மாசுபடுகிறது.
மீன்வளம் கிடைக்காததால் தீவுகளை தாண்டி ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டி உள்ளது’ என்றனர்.
கடந்த 2022ல் கீழக்கரைக்கு வந்த அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கழிவுநீர் கலக்கும் இடத்தில் விபரம் தெரியாமல் கடலில் குளித்தார்.
பின்னர், இந்த விபரம் தெரிந்து, கடல் நீரை துாய்மையாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா கூறுகையில், ”நகரில் எட்டு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க உள்ளது. விரைவில் கடலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்,” என்றார்.

