ஹைதராபாத் ரஜிவ் காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 57ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ஓட்டங்களை எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. ஆரம்ப வீரர்களாக டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்து வீச்சை எந்த வித சிரமமின்றி எதிர்கொண்டு அதிரடியில் வெளுத்து வாங்கினர்.
அதிரடியாக டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறிது நேரத்திலேயே அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த லக்னோ அணி எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
முடிவில் வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ஓட்டங்களை அடித்து ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா
75 ஓட்டங்களும் எடுத்தனர்.

